Friday, March 22, 2019

உலக கவிதை தினம்

முதல் காதல் 
(Version 1.1)

பதின் வயதில் பற்றத் தொடங்கியது 
அந்தக் காதல் - சற்றே தயக்கம் 
எனினும் மகிழ்ச்சியில் 
திக்குமுக்காடி போனேன் !

என்னை அறியவும் மறக்கவும் 
கற்றேன்!

இடையிடையே வந்து மறந்த 
மற்ற காதல்களில் - அதன் 
ஆழம் புரிந்தேன், 

பொதுத் தேர்வின்  ஆயத்தம் போது 
புத்தகத்தின் நடுவில் காதல் - 
என்ன இது?! என்று அம்மா சீற, 
- எப்படியோ சமாளித்து ஓடியதும் 

பின் சகதோழியிடம் மறைத்து 
அவர்களிடம் பிடிபட்டு - "ஆம்!"
'நான் தான் ' - சிரித்து ஓடியது ஒரு காலம்!

கல்லூரியின் பேருந்து பயணங்கள் 
காதலுக்கு ஏற்ற நேரமாக மாற, 
அடித்தும் சிரித்தும் - அது 
மிக ஆழம் பெற, 
பின் சற்றே தைரியமாக, 
தோழிகளிடம் கூற - அது 
கல்லூரி பத்திரிகையிலும் 
அறிவிப்பு பலகையிலும் பதிவு பெற, 
ஆம்! நான் தான் - எதார்த்தமாக கூறியது 
ஒரு காலம்!

நண்பர்கள் பிறந்த நாட்களில், 
வாழ்த்து அட்டையோடும் பரிசோடும் 
முடிந்த வரை காதல் பரிமாற்றங்களும்... 

கல்லூரியின் இறுதியில் 
என்னை பலவாறாக எண்ண வைத்தது 
இது சாத்தியமா? நெடு தூரம் தொடர முடியுமா?

'இடைவெளி தூரமானால் 
காதலும் சற்றே சன்னமாகி விடும்'
புதிய வேலை, பயணங்கள் - சற்றே இடைவெளி! 

வெகு நாட்கள் இல்லை, 
அயல் நாட்டு பயணங்களின் தனிமை உரைத்தது - அந்த பிரிவு! 

இணையத்தின் மூலம் புதுப்பித்து 
உயிர்ப்பித்து பேரன்பாகி, 
புதிய கோணங்களில் வாழ்ந்தும் ரசித்தும் 
- மிக நெருக்கமான அனுபவம்! இன்றும் தொடர்ந்து... 

ஒரு நாள் எனது காதலை 
உலகமே மெச்சும் -  நானே சொல்லி கொண்டேன்!

உடனே பார்த்தாக வேண்டும் - அன்று 
நேரத்தை காரணம் கூறலாம் - இன்று 

புதிய பந்தத்தை தேர்ந்து எடுத்ததும் 
தெரிய படுத்தியது - எனது முதற்காதலையே... 
இன்றும் என் துணைக்கு புரியாத புதிர் -
எனது 'காதல் மொழி'!

அடுத்தடுத்த சூழல்களில் சற்றே 
மறந்தே போனேன் ... 
எனினும், 
சிந்தனையை விட்டு 
மறையவில்லை, 
இன்றும் நான், அந்த 
முதற்காதலான "கவிதையோடு"...!

               - உலக கவிதைகள் தின வாழ்த்துக்கள்!!!!!

கவிதைகளில் வாழ்பவருக்கும், கவிதைகளால் வாழ்பவருக்கும்...